Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவுக்கு பிறகு அம்மா உணவகங்களில் விற்பனை சரிவு

ஆகஸ்டு 10, 2021 12:49

சென்னை: கூலித் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், ஆதரவற்றவர்களுக்கு அம்மா உணவகம் அட்சயபாத்திரமாக விளங்கி வருகிறது. சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் 7 இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளையும் குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. இட்லி, கலவை சாதங்கள் மற்றும் சப்பாத்தி போன்றவை தயார் செய்து குறிப்பிட்ட நேரத்துக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஏழை, எளியவர்கள் அம்மா உணவகங்களில் வழக்கமாக சாப்பிட்டு வருகிறார்கள். இங்கு கொரோனாவுக்கு முன்பு வரை தினமும் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சாப்பிட்டனர்.

ஆனால் கொரோனாவுக்கு பிறகு அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்தது. விற்பனை சரிந்தது. தொழிலாளர்கள் தற்போது வேலைக்கு வந்தாலும் கூட, இன்னும் இயல்பு நிலையை எட்டவில்லை. தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள். இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட குறைவாகும். ஆனாலும் கடந்த ஆண்டை விட தற்போது விற்பனை அதிகரித்து இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுகிறார்கள். இதனால் பெருங்குடி, ஓ.எம்.ஆர். பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் விற்பனை குறைந்தது. இப்போது படிப்படியாக அனைத்து தொழில் சார்ந்த நிறுவனங்களும் செயல்படுவதால், தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர். அதனால் விற்பனை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விற்பனையில் சரிவு ஏற்பட்ட போதிலும், செலவு குறையவில்லை. ஊழியர்களுக்கான சம்பளம், மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவைகளின் விலை ஏற்றத்தால் செலவினம் அதிகரித்து வருகிறது.

அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்